‘நான் மூனாங்கிளாஸ் வரைக்கும் படிச்சதெல்லாம் ஆரணி, அதுக்கப்புறம் வெல்லூர் வந்துட்டேன் பாட்டி வீட்டுக்கு. அப்போவே எனக்கு ஒரு பொண்ண பிடிக்கும் ஏன்னா அவ ரொம்ப நல்லா படிப்பா. என்னடா இப்படி மார்க் வாங்குறாளேன்னு பார்ப்பேன். நான் ஊர விட்டு பாட்டி வீட்டுக்கு வந்தப்புறம் எப்போ லீவுக்கு ஆரணி பக்கம் போனாலும் அவ வீட்டு வழியா போவேன் எப்படியாவது அவ வெளிய வர்ற மாட்டாளா.. நான் பார்த்துட மாட்டேனான்னு.
அதை விடுங்க, வேற ஊருக்கு வந்து புது ஸ்கூல்ல சேர்ந்தேன்ல அங்க நான் ஏழாவது படிக்கும்போது ஒரு மேத்ஸ் மிஸ்.. பொறுமையானவங்க, நல்லா பேசுவாங்க. பேரு தீபலக்ஷ்மி. அவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன் தெரியுமா? அவங்கதான் எனக்கு வாழ்க்கையிலயே மொதமுறையா என் பர்த்டேவுக்கு கிஃப்ட்டு வாங்கிக் கொடுத்தாங்க. காஸ்ட்லியான ஜெல் பேனா ஒன்னு வாங்கிக் கொடுத்தாங்க. க்ளாஸ்ல எல்லாருக்கும் முன்னாடி கொடுத்தாங்க மறக்கவே முடியாது. அதனாலயே எனக்கு மேத்ஸ்னா ரொம்பப் பிடிச்சுப் போச்சு.’
ஃபார்மல்ஸ், முதுகில் கம்பெனி பெயர் அச்சடிக்கப்பட்ட பை, கழுத்தில் ஐ.டி கார்ட்.. இப்படி அந்த ஏழாங்கிளாஸ் பையன் வளர்ந்து பெரிய ஆளாயிட்டான். இருந்தாலும் அந்த ஜெல் பேனா அவருக்கு மிக முக்கியமான விலை கொடுத்து வாங்கிவிடவே முடியாத ஒரு பொருளாகவே உயரமான இடத்தில் இருக்கிறது என்பது அவர் இந்தக் கதையை சொல்லும்விதத்தில் தெரிந்தது.
இந்தக் கதையை அவர் சொல்லி முடித்த சில நொடிகளில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.
இப்படி எத்தனையோ தீபலக்ஷ்மி மிஸ்களால் எத்தனையோ மாணவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் பெரிய பெரிய பாராட்டுகள் வாங்குவதற்கும் அந்த ஒற்றை ஜெல் பேனாவும் அது கொடுத்த நம்பிக்கையும் ஒரு முக்கியமான காரணம். அதுதான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம். நான் மகிழ்ந்துகொண்டேன் அவரது வாழ்க்கையில் தீபலக்ஷ்மி மிஸ் போல ஒருவரை அவர் சந்தித்ததற்கு.